Saturday, November 22, 2014

நான் ஒரு முட்டாளுங்க – 16 சண்டே ஸ்கூல் தேர்வுகள்

எங்க சரளா தங்கமான பொண்ணுங்க. முகம் கோணாம எனக்கு உதவி செய்வா; தம்பியை பொறுப்பா பத்துப்பா. மத்தவுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறதிலே அவ நம்பர் ஒண்ணு! யார்கிட்டயும் சண்டை போடமாட்டா. அழகா ஜெபம் பண்ணுவா ஒழுங்கா வேதம் வாசிப்பா. ஆனா பாருங்க அவ கொஞ்சம் மந்தம். அவ்வளவா படிப்பு வராது. நானும் அவ அப்பாவும் அதை பத்தி கவலைப்படுவதில்லை. ஆனா  அவ வகுப்பு டீச்சர் அவளைமக்குபட்டம் கொடுத்து கடைசி பெஞ்சுக்கு தள்ளிட்டாங்க. முதல் மார்க் வாங்கும்  டாக்டரம்மா மகள் மேரி தான் டீச்சருக்குசெல்லப் பிள்ளையாம்.  இதைச் சொல்லி கண் கலங்கிய சரளாகிட்டே, “ஏசு சுவாமிக்கு நீ செல்லப் பிள்ளைம்மா. ஆகையால கவலைப்படாதேன்னு சொல்லி அவளை சமாதானம் பண்ணி வெச்சிருந்தேன்.

ஆனா பாருங்க போனவாரம் ஞாயிறு பள்ளியிலே தேர்வு வச்சு பிள்ளைங்களுக்கு பரிசு கொடுத்திருக்காங்க. மேரிக்கு தான் முதல் பரிசு. அவதான் சமத்தாச்சே! சரளாதான் பாவம்; ரொம்பவும் சோர்ந்து போயிட்டா. “ஏசு சுவாமிக்குக் கூட மேரிதாம்மா செல்லப்பிள்ளை. அவளைதாம்மா கொவிலிலேயும் எல்லாரும் பாராட்டினாங்க.” என்று சொல்லி சரளா கண் கலங்கினா.

தெரியாமதான் கேட்கிறேன். இந்த சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுபோவது உங்கள் பிதாவின் சித்தமல்ல (லூக். 18:14) என்று ஏசு சாமி சொன்னாரே; சண்டே ஸ்கூலிலே பரிட்ஷை வைச்சு, மார்க்கு போட்டு, பரிசு கொடுத்து, எம்புள்ளை மனசை ஓடச்சு….. இதெல்லாம் தேவைங்களா? எல்லா பிள்ளைங்களும் சாமிக்கு பிரியமானவுங்க என்று சொல்ல வேண்டிய ஆலயத்திலே அறிவுள்ள பிள்ளைங்களை மட்டும் பாராட்டி பரிசு கொடுப்பது என்னங்க நியாயம்? அறிவிலே குறைவுபட்ட பிள்ளைகளுக்கு பள்ளியிலே கிடைக்கிற புறக்கணிப்பு பத்தாதா ஆலயத்திலும் புறக்கணிப்பா?


நான் சொல்லுவது முட்டாள்தனமா தோணலாம்: குழந்தைகளுடைய நல்ல குணங்களையும், ஆன்மீக வளர்ச்சியையும் பாராட்டி எல்லாரும் ஏசுசாமி பிள்ளைங்கஎன்று சண்டே ஸ்கூல் போதிக்கனும்னு நினைச்சிங்கனா, தயவுசெய்து பரிட்ஷை வைக்கிறதையும் பரிசு கொடுக்கிறதையும் ஓழிச்சுக் கட்டுங்க!

No comments:

Post a Comment